புதுதில்லி, செப். 21-
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கைது செய்யப்பட்டு, குறிப்பாக பதின்பருவ வயது பெண்கள், கைது செய்யப்பட்ட அடைப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் எத்தனை பேர் என்று கேட்டு மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் சார்பாக அவரது மகள் இல்டிஜா மத்திய அரசுக்கும், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசாங்கத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்ற மாதம் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டபின்னர், அம்மாநிலத்தில் கைது செய்யப்பட்டு, அடைப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை எத்தனை? குறிப்பாகக் கைது செய்யப்பட்டிருக்கிற அல்லது அடைப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற பதினெட்டு வயதுக்குக் கீழான பதின்பருவப் பெண்கள் எத்தனை பேர்? என்று அவர் தன் கடித்த்தில் கேட்டுள்ளார்.
மேலும் அவர் தன் கடிதத்தில், கைது செய்யப்பட்டு, இதர மாநிலங்களுக்கு அனுப்பப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை எத்தனை என்றும் கோரியுள்ளார்.
முன்னதாக இல்டிஜா, ஆகஸ்ட் 5ஆம் தேதியிலிருந்து செயல்படாமலிருந்த தன் தாயாரின் ட்விட்டர் பக்கத்தை மீளவும் செயல்படுத்தி வைத்தார். அவ்வாறு செயல்படுத்தி வைத்தபின் அப்பக்கத்தில், இப்போதிலிருந்து அவரது ட்விட்டர் வலைப்பக்கம் அவரிடமிருந்து உரிய அதிகாரத்தைப் பெற்று என்னால் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.